இவ்வாண்டின் இறுதிக்குள் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும்!

user 05-Jun-2024 இலங்கை

இவ்வாண்டின் இறுதிக்குள் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடும் என்றும் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து செய்தது போல், அனைவரும் ஒன்றாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ருவன்வெல்ல இல்லத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வங்குரோத்து அடைந்துவிட்டாதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வாறு இந்தளவு சலுகைகளை வழங்க முடியும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
உறுமய, அஸ்வெசும, அரிசி மானியம் வழங்கும் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது ஏன் செயற்படுத்தப்படவில்லை என்றும் கேட்கிறார்கள்.
அதேபோல், அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கினோம்.
2015 இற்குப் பிறகு இவ்வாறான சம்பள உயர்வு வழங்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஏனைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில், நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றேன். அது மட்டுமன்றி, சரியான கொள்கையின்படி செயற்பட்டோம். அதனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்தோம்.

இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப மிகவும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. வரி அதிகரிப்பு இலகுவானதாக இருக்கவில்லை.
ஆனால் அது மட்டுமே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே வழியாக விளங்கியது.
நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடத்திலும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

 

ஒரு சிலர் அதற்கு முன்வரவில்லை. முடிந்தளவில் நான் எல்லோரையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னோக்கிச் சென்றேன். முதன்முறையாக அரசியல் சாராத அமைச்சரவையொன்று அமைக்கப்பட்டது. கட்சி பேதமின்றி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

குறுகிய மனப்பான்மை இன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எரிபொருளும் உரமும் கிடைத்தாலும் நல்ல விளைச்சல் கிடைத்தாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் நாம் முழுமையாக விடுபடவில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் வங்குரோத்து நிலையில் இருந்து மீளக்கூடிய சாத்தியம் உள்ளது.
ஆனால் அது போதாது. நமது நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எனவே எமது பொருளாதார இலக்குகளின்படி சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின், திட்டமிட்டபடி செயல்பட வேண்டும். எனவே நாம் அனைவரும் இந்த நேரத்தில் அரசியலை ஒதுக்கி வைத்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து செய்தது போல், நாம் அனைவரும் ஒன்றாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை