கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னாலுள்ள மாஃபியா குறித்து குற்றம் சுமத்தும் அரசாங்கம் !

user 10-Sep-2024 இலங்கை 18 Views

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கான நீண்ட வரிசைகளுக்கு பின்னால் ‘மாஃபியா’ செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alies) குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய வெற்று கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்தது.

இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, கடவுச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பான நெருக்கடிக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டியிருந்தது.

எவ்வாறாயினும், பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தேசிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அலஸ், கடவுச்சீட்டு தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகள் இருக்கவில்லை என விளக்கமளித்தார்.

நள்ளிரவில் முன்பதிவு செய்யக்கூடிய இணையப்பதிவுகளை ஒரு குறிப்பிட்ட குழுவினர் 100க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி விரைவாக பதிவுகளைப்; பெற்றுக்கொண்டு, அவற்றை அப்பாவி மக்களுக்கு 45,000 ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

தாம், அதைப் பற்றி அறிந்ததும், உடனடியாக இணையப்பதிவு முறையை நிறுத்தவும், வரிசையை அனுமதிக்குமாறு கோரியதாக அலஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் அதன் பின்னரும் வரிசைகளுக்கு முடிவே இல்லை. குறிப்பிட்ட நபர்கள் வரிசையில் காத்திருந்து, அந்த தமது முன்பதிவுகளை 20,000 அல்லது 25ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு புதிய கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காகச் சென்றதாகக் கூறப்படும் செய்திகளையும் அமைச்சர் மறுத்துள்ளார்.   

 

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை