Thursday, September 19, 2024
தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரச்சார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளது. தேர்தலின் போதும் அதன் பின்னரும் உளவுத்துறையினர் தேவையான முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துங்கள்.
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை தேடுவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் உதவியை நாடவுள்ளோம்.
புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் காவல்துறையினர் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம்.” என குறிப்பிட்டார்.