Monday, September 16, 2024
வவுனியா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்களிடம் அங்கு கடமையிலுள்ள தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கின்றதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தூய்மையான வார்த்தைப் பிரயோகம் இல்லை சேவை, மனப்பான்மை, மனிதப் பண்புகளை மதிக்கத் தெரியாதவர்களை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்திவருகின்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இச் செயற்பாடுகள் வவுனியா வைத்தியசாலையில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து அவசிய அவசர சிகிச்சைக்காகவும், தமது உறவினர்களைப் பார்வையிடவும் வரும் உறவினர்கள் நண்பர்கள் மீது பாதுகாப்பு என்ற போர்வையில் கடமையிலுள்ள ஊழியர்கள் மனிதாபிமானமற்று நடந்துகொள்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு இன்னல்களுடன் அரச வைத்தியசாலைக்குச் செல்பவர்கள் மீது சேவை மனப்பான்மை மிக்க செயற்பாடுகள் காணப்படவில்லை. சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் போல, பல்வேறு கெடுபிடிகளையும், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் அவர்கள் மீது, இதனால் மேலும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இந்நடவடிக்கையினால் அரச வைத்திய சாலை, அதிகாரிகள் மீது வெறுப்பும் ஏற்படுகின்றது. ஒரு நோயாளரைப் பார்வையிடச் செல்பவர் மேலும் நோயாளராகவே வீடு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
எனவே இவற்றை சரி செய்து மக்களுக்கான சேவையை சீர்ப்படுத்தி ஒழுக்கமுள்ள பாதுகாப்பு ஊழியர்களைக் கடமையில் ஈடுபடுத்த வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் தனியார் பாதுகாப்பு "சேவை" நிலையம் அத்தியாவசியமான மக்கள் "சேவை" நிலையங்களில் ஒன்றான வைத்திய சாலையில் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் பாதுகாப்பு சேவை மேற்பார்வை ஊழியர் ஒருவர் அங்கு கண்காணிப்புக் கடமையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.