Monday, September 16, 2024
தமிழக கடற்றொழிலாளர்களையும், வடக்கு கடற்றொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்பு படையணியைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"வடக்குக் கடலில் தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. வடக்கு கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு, அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன.
தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் கூட தடை செய்யப்பட்ட அடிமடி தொழிலை அவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து செய்கின்றனர்.
இதனைத் தடுக்க வேண்டிய கடமை கடற்றொழில் அமைச்சரின் கடமையாகும். அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதற்காக குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்புப் படையணியை உருவாக்கவுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர், அமைச்சரவைப் பாத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
உருவாக்கப்படவுள்ள கடல் பாதுகாப்பு படையணியில் தமிழர்களே உள்வாங்கப்படுவார்கள். குறிப்பாக வடக்கு கடற்றொழிலாளர்களே அதில் அதிகம் உள்வாங்கப்படுவார்கள். அவர்களைத் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் நேரடியாக மோத விடப் போகின்றார்களா ?
இது இலங்கைக் கடற்படையை நல்லவர்களாக்கி, கடல் பாதுகாப்புப் படையணியைக் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் மோத விடும் செயற்பாடு.
அதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் தமிழக தமிழ் கடற்றொழிலாளர்களை, வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு எதிராகப் போராட வைக்கும் முயற்சியே இது.
கடற்படை செய்ய வேண்டிய வேலைகளைக் கடல் பாதுகாப்புப் படையணியைச் செய்யத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்கக்கூடாது.
எனவே, அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாகக் கடற்றொழில் அமைச்சர் மீளப் பெற வேண்டும். அதற்கு இங்குள்ள கடற்றொழில் சங்கங்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.