ஒருவாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ்

user 26-Mar-2024 இலங்கை 9 Views

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோர் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றையதினம் (26.03.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க இருப்பதால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் தேவை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போது, முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்ட் வழங்கவிட்டதாக தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை