Monday, September 16, 2024
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா- முரளீதரன் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்
இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஆரம்பத்தில் 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.