Saturday, July 27, 2024
இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக, உயர் ரக விண்கலமான “ஸ்டார்லைனரில்” விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, போயிங் நிறுவனத்தின், ‘ஸ்டார்லைனர்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரொக்கெட் நேற்று (05) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
‘அட்லஸ் 5’ விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இன்றிரவு (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது.
இதில், 58 வயதுடைய இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், மற்றும் நாசாவின் மூத்த விண்வெளி வீரரான 61 வயதுடைய புட்ச் வில்மோர் பயணித்துள்ளனர்.
போயிங் நிறுவனத்தின், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்களை சுமந்து செல்லும் முதல் விண்வெளி பயணம் இதுவாகும்.
அதன்படி, போயிங் நிறுவனத்தால் ஏவப்பட்ட புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செய்யும், முதல் விண்வெளி வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.
இவர்கள், 25 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆட்களை அனுப்பக்கூடிய 2 ஆவது தனியாா் நிறுவனம் என்ற பெருமையை போயிங் நிறுவனம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.