Monday, September 16, 2024
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய (United Kingdom) உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் (Andrew Patrick) தெரிவித்துள்ளார்.
இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவுக்கு தெற்காசிய பிராந்தியம் முக்கியத்துவமிக்கது. எதிர்காலம் இங்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இலங்கையின் இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் இருந்து வருகிறது.
சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தை பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பெற்றுள்ளனர்.
மேலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காததன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவும் நோக்கில், "அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம்’’ என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.