Thursday, September 19, 2024
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பரிசீலித்து ஒப்பீட்டு ரீதியிலேதான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கலாம் என்ற முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam ) தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியினுடைய நிலைப்பாடு தொடர்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பானது மிகவும் சுமூகமான நிலையிலே இடம்பெற்றது. இதன்போது கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் கூட சஜித்தை தேரிப்பது தொடர்பான தீர்மானத்தை மாற்றியமைப்பதோ அல்லது இரத்துச் செய்வதோ என்ற கருத்து எங்களிடையே பகிரப்படவில்லை.
ஆகவே அதனடிப்படையில் அதற்கு பாதகம் இல்லாமல் நாங்கள் எமது கட்சியினுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
அந்தவகையில் இவ்வார இறுதியில் குறித்த உபகுழு கூட இருக்கின்றது. இதில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் கடந்த 01ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒட்டியதாகவே இருக்கும்.
எனினும், வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேதான் ஒப்பீட்டு ரீதியில் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எங்களுக்கு சாதகமாக இருந்தது.
இதில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களையும் குறிப்பாக சஜித் பிரேமதாச தெரிவித்த பகிரங்க கருத்துக்களையும் உள்ளடக்கியதாவே எமது நிலைப்பாடு இருந்தது. எனவேதான் சஜித்தை ஆதரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.