ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்

user 17-Apr-2024 உலகம் 2 Views

வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் (Jake Sullivan) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை(13) ஈரான் தாக்குதல் நடத்தியது.

இருப்பினும் அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தமையினால் மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதோடு ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்தச் சூழலில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக் கொள்ளவேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளதுடன் இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யுமானால் ஈரானின் பதிலடி நிச்சயம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் எங்களுடைய தூதரகம் மீது கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே நாங்கள் தொடுத்த தாக்குதலென ஈரான் தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலையடுத்து ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து அதிபர் பைடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படுமெனவும் ஈரானின் ஏவுகணை திட்டங்கள், இஸ்லாமிய புரட்சி காவல்படை மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் அமைப்புகளுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படுமென ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் மற்றும் நட்பு நாடுகளும் கூட வரவுள்ள நாட்களில் தடை விதிக்க கூடுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் தொடர்புடைய தடைகளுடன் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 600 இற்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் பிற வடிவிலான சட்டவிரோத வர்த்தகம், பயங்கர மனித உரிமைகள் துன்புறுத்தல்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதில், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் கடைப் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதோடு இந்த அழுத்தம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலைத்தன்மையற்ற சூழலுக்கு தள்ளும் மற்றும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட ஈரான் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டணி அரசுகள், நட்பு நாடுகள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் உதவியுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காதென ஜேக் சுல்லிவன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை