Monday, September 16, 2024
சுமார் இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை திறப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். திருக்கோவில் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், மயக்கமடைந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், குறித்த மாணவர் அங்கிருந்து அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, குறித்த பகுதி மக்கள்திருக்கோவில் வைத்தியசாவை நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தின் பின்னர், இதுவரையிலும் அந்த வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதுடன் எவ்வித சேவையும் வழங்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில், இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த, எஸ். ஸ்ரீதரன் சிலரின் தவறுகளை மூடிமறைப்பதற்காக வைத்தியசாலையின் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்காரணமாக நாளந்தம் சராசரியாக 340க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து திரும்பி செல்வதாகவும், அவர் தெரிவித்தார்.