Monday, September 16, 2024
இந்தியாவின் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(21.03.2024) இடம்பெற்றள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், விசாரணைக்கு முன்னிலையாக கோரி 9 முறை அமலாக்கத்துறை அழைப்பானை அனுப்பியுள்ளது.
எனினும் இது சட்டவிரோதமானது எனக் கூறி கெஜ்ரிவால் முன்னிலையாக மறுத்து வந்ததனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுள்ளது.
இதன்போது கெஜ்ரிவாலின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று (21) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் மீதான கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.