யாழில் ஓடாத பேருந்துக்கு முன்பதிவு; பணத்தை இழந்தவர் வேதனை!

user 23-Mar-2024 இலங்கை 3 Views

யாழ்ப்பாணத்தில் கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றில் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெல்லிப்பழையை சேர்ந்த நபரொருவர் கொழும்பில் நடைபெறும் போட்டிப் பரீட்சையொன்றுக்கு செல்வதற்காக பேருந்து முற்பதிவு செய்யும் இணையத்தளமொன்றின் ஊடாக இரு ஆசனங்களுக்காக 4600 ரூபாய் பணத்தை வங்கி அட்டை ஊடாக செலுத்தி ஆசனங்களை முற்பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து முற்பதிவு செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் செய்தி அனுப்பபட்டுள்ளது. இதனை நம்பி கொழும்பு செல்வதற்காக நேற்றையதினம் இரவு குறித்த நபர் தெல்லிப்பழை சந்தியில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் பேருந்து வராத நிலையில் இணையத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இதனையடுத்து தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு சென்று பார்த்த போதும் முற்பதிவு செய்த பேருந்தை காணவில்லை.

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குறித்த நபர் வேறொரு பேருந்து மூலம் கொழும்புக்கான பயணத்தை தொடர்ந்தார். பயணத்தின்போது பேருந்து நடத்துனரிடம் விசாரித்தபோதே தான் முற்பதிவு செய்த பெயரில் பேருந்தே சேவையில் ஈடுபடுவதில்லை என்பதை அறிந்து தான் ஏமாறியதை உணர்ந்துள்ளார்.

அதேவேளை இணையத்தளம் ஊடாக வங்கி அட்டைகளை பயன்படுத்தி பல வகையில் மோசடி இடம்பெறும் நிலையில் சேவையில் ஈடுபடாத பேருந்துக்கு கட்டணம் அறிவிடும் மோசடியும் அரங்கேறுகிறது. எனவே யாழ்ப்பாண மக்கள் இவ்வாறான மோசடியாளர்களிடம் ஏமாறாது விழிப்புடன் இருக்கவேண்டும்.  

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை