Monday, September 16, 2024
யாழில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம் ஒன்று சங்கானை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றையதினம் (31.05.2024) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, போராட்டக்காரர்கள், 'எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்', 'புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்' மற்றும் 'சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மேலும், வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.