Monday, September 16, 2024
இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கிடையிலான பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான ஒத்துழைப்பு பயிற்சி என பெயரிடப்பட்டுள்ள குறித்த பயிற்சி நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பினை பேணுதல், பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் ஐந்தாவது தடவையாக இருநாடுகளுக்கும் இடையிலான கடற்படை பயிற்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1995 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நடவடிக்கையானது அமெரிக்கா பங்களாதேஷ் புரூனே கம்போடியா இந்தோனேஷியா மலேசியா பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் தீமோர் ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் இருதரப்பு மற்றும் பல்தரப்பு பயிற்சிகளின் தொடராகும்.
இந்த நிலையில் 30 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் குறித்த பயிற்சி தொடரானது இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பாரம்பரிய மற்றும் கடல்சார் பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இணைந்து செயற்படுதல் விளையாட்டு கலாசாரம் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் ஊடாக இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் தொழில் ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.